சென்னை: ரகசிய வாக்கெடுப்பு கோருவது கட்சித் தாவல் தடைச் சட்டத்துக்கு எதிரானது என்று அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
சென்னை அதிமுக தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேரவை நிகழ்வுகள் குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், பேரவை நிகழ்வுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் கலவரம் செய்தவர்கள்தான் வெளியேற்றப்பட்டனர். உடலில் ஒரு கட்டி வந்தால், உடல் நலனைக் கருதி அந்த கட்டியை வெட்டி அகற்றுவது போலத்தான், சட்டப்பேரவையில் குறுக்கீடு செய்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
எம்எல்ஏக்களை ஒரே இடத்தில் வைத்திருந்ததில் எந்த தவறும் இல்லை. அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு திரும்ப வராமல் போய்விட்டால் என்ன செய்வது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எப்படி தேடுவது. அதனால்தான் ஒரே இடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
வெளிநடப்பு செய்வதுதான் திமுகவுக்கு கைவந்த கலையாகிவிட்டதே. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதே திமுகவின் குறிக்கோள். அதனால்தான் சட்டப்பேரவையில் கலவரத்தில் ஈடுபட்டனர். சபாநாயகரை பிடித்துத் தள்ளினர். இதனால் தனபால் மிகுந்த வேதனைக்கு ஆளானார்.
சட்டப்பேரவையில் அனைத்து கலவரத்தையும் செய்த திமுக, தற்போது ஆளுநரிடம் புகார் அளிக்கிறது. அவர் ஏதாவது செய்து, ஆட்சியைக் கலைத்துவிடுவார் என்று நினைக்கிறார்கள் என்று அவர் கூறினார்.