கச்சத் தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கு நாட்டுப் படகுகளில் செல்ல அனுமதி கோரி மனு

கச்சத் தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கு மீனவர்கள் நாட்டுப் படகுகளில் செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு, ராமநாதபுரம் ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

கச்சத் தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கு மீனவர்கள் நாட்டுப் படகுகளில் செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு, ராமநாதபுரம் ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
இலங்கை வசமுள்ள கச்சத் தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவில், ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்வது வழக்கம். திருவிழாவுக்கான ஒருங்கிணைப்பாளராக, ராமேசுவரம் வேர்கோடு புனித சூசையப்பர் ஆலய பாதிரியார் எல். சகாயராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மீனவர்கள் தங்களது நாட்டுப் படகுகள் மற்றும் விசைப் படகுகளில் சென்று திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக 100 விசைப் படகுகளுக்கு மட்டுமே எல். சகாயராஜ் அனுமதி வழங்கி வருகிறார்.
மேலும், ஒரு விசைப் படகுக்கு ரூ. 1300 கட்டணமாக நிர்ணயித்துள்ளார். இந்த கட்டணத்தைச் செலுத்தாத படகு உரிமையாளர்களும், மீனவர்களும் திருவிழாவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
இதனால், ஏழை மீனவர்கள் அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, சகாயராஜை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கியும், கச்சத் தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டுப் படகில் செல்ல அனுமதித்தும் உத்தரவிட வேண்டும் என்று, ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜெ. பிரின்úஸா ரேமண்ட் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஏ. செல்வம், பி. கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்குரைஞர் டி. முருகானந்தம் வாதிடுகையில், இலங்கை வசமுள்ள கச்சத் தீவு ஆபத்தான கடல் பகுதி.
அப்பகுதியில் அலைச் சீற்றம் அதிகம் இருப்பதால், நாட்டுப் படகுகளில் செல்வது பாதுகாப்பானது அல்ல. எனவே, நாட்டுப் படகில் கச்சத் தீவு செல்ல அனுமதி வழங்க முடியாது என்றார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரர் அளித்த மனுவை பரிசீலித்து மூன்று நாள்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க, ராமநாதபுரம் ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com