கோவை: ஈஷா யோகா மையம் சார்பில் நடைபெறும் ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சரியாக 19 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை வர உள்ளார்.
பிப்ரவரி மாதம் 25ம் தேதி கோவை வரவிருக்கும் அத்வானி, மூன்று நாட்கள் தங்கியிருக்கவும் திட்டமிட்டுள்ளார்.
1998ம் ஆண்டு கோவையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, தற்போது தான் முதல் முறையாக அவர் இந்நகரத்துக்கு வரவிருக்கிறார்.
இந்த 19 ஆண்டுகளில் 5 முறை தமிழகத்துக்கு வந்திருந்தாலும், அவர் கோவைக்குச் செல்லவில்லை என்று தமிழக பாஜக பொதுச் செயலர் வானதி ஸ்ரீனிவாசன் கூறினார்.
1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, கோவை மாவட்டம் ஆர்எஸ் புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்வதாக இருந்தது. அன்றைய தினம் கோவையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து, அத்வானி மற்றும் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கோவையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.