சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்தபப்ட்ட வேண்டும் என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் அரும்பாக்கம் ஜோசப் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவிற்கு தமிழக அரசும், அப்பல்லோ நிர்வாகமும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டிருந்தன. அப்பொழுது முதலில் அப்பல்லோ நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.அதில் ஜெயலலிதா சிகிசிச்சை தொடர்பான விபரங்களை வெளியிட தயார் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் அந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பல்லோ நிர்வாகம் சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த பொழுது தன்னுடைய புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளும் நோயாளியின் அந்தரங்கத்தை மதிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன. அதன்படியே அவரது புகைபடம் வெளியிடப்படவில்லை. ஆனால் நீதிமன்றம் விரும்பினால் சிகிச்சை விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னுடைய பதில்மனுவை தாக்கல் செய்திருந்தது. அதிலும் இதே விபரங்கள் தான் தாக்கல் செய்யபட்டிருக்கின்றன என்று மனுதாரர் அரும்பாக்கம் ஜோசப் தரப்பில் புகார் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை மார்ச் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.