ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடிக்கு பைபர் படகில் வந்த இலங்கை அகதியை உளவுப்பிரிவு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தனுஷ்கோடி கடற்கரையில் கடந்த 16ஆம் தேதி பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. இலங்கையை சேர்ந்த இப்படகு இந்தியா வந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, காற்றின் வேகம் காரணமாக திசை மாறி கரை ஒதுங்கியிருக்கலாம் என கூறப்பட்டது. ஆனாலும், உளவுப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த இலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்த அமலதாஸ் மகன் அந்தோணிதாஸ் (42) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மண்டபம் அகதிகள் முகாமில் 17 ஆண்டுகளாக வசித்து வந்த அந்தோணிதாஸ், இலங்கைக்கு சென்று விட்டு கடந்த 15ஆம் தேதி இலங்கையிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு 16ஆம் தேதி தனுஷ்கோடிக்கு வந்துள்ளார். கடற்கரையில் படகை மட்டும் நிறுத்திவிட்டு, மண்டபம் அகதிகள் முகாமிற்கு சென்றுள்ளார். அங்குள்ள ஒருவரை சந்தித்து விட்டு மீண்டும் இலங்கைக்கு திரும்பி செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தோணிதாûஸ உளவுப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து, மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.