சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை எடிட் செய்யப்படாத நிலையில் வழங்குமாறு சபாநாயகரிடம் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதியன்று தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெளியேற்றப்பட்ட நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் 122-11 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க.வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது சட்டசபை உறுப்பினர்கள் கட்டாயத்தின் அடிப்படையில் வாக்களிக்க வைக்கப்பட்டதாகவும், எனவே வாக்கெடுப்பை ரத்து செய்து விட்டு புதிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு கருத்துக் கூறிய நீதிபதிகள், 'தற்போது தொழில்நுட்பம் முன்னேற்றிவிட்டது.எனவே நீங்கள் கூறுவதற்கு ஆதாரமாக உங்களிடம் இருக்கும் வீடியோ பதிவுகளை முதலில் தாக்கல் செய்யுங்கள். அதன் பின்னர் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்று கூறி இருந்தனர்.பின்னர் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பதிவு செய்யப்பட்ட பேரவை நிகழ்வுகளின் எடிட் செய்யப்படாத வீடியோ காட்சிகளை உடனடியாக வழங்குமாறு சபாநாயகரிடம் திமுக சார்பில் மனு கொடுத்து உள்ளது.சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கையெழுத்திட்ட மனு சபாநாயகர் அலுவலகத்தில் ஒப்படைக்கபட்டு உள்ளது.
இந்த கோரிக்கை மனு மீது சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது முக்கியதுவம் பெறுகிறது.