தமிழக அரசு போக்குவரத்துக் கழக முன்னாள் ஊழியர்களின் ஓய்வூதியப் பயன்களை உடனே வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, விடுமுறைக்கால ஊதியம், பணிக்கொடை, அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய முறையைத் தொடர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் குடும்பத்துடன் பல இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தமிழக அரசு முன்னாள் ஊழியர்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நேரம், காலம் பார்க்காமல் உழைத்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிப் பயன்களை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழக அரசு, போக்குவரத்துக் கழகங்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.