மாரண்டஹள்ளி அருகே யானை தாக்கியதில் விவசாயி பலி
மாரண்டஹள்ளி அருகே, கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார். மேலும், பள்ளி மாணவர் காயமடைந்தார்.
தருமபுரி மாவட்டத்தில், மாரண்டஹள்ளி அருகே வனப் பகுதியிலிருந்த ஓர் ஆண் யானை புதன்கிழமை வெளியேறி, ஆள்மாரப்பட்டி கிராமத்துக்குள் புகுந்தது. இதை கண்ட, கிராம மக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அப்போது, அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த விவசாயி கிருஷ்ணன் (75) என்பவரை யானை தனது தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்தது. இதில், பலத்த காயமடைந்த அவர், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், அந்தப் பகுதியில் இருந்த எம்.செட்டிஹள்ளியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் பிரவீன் (13) என்பவரை யானை துரத்தியது. அப்போது, யானையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடியபோது, அருகே உள்ள பள்ளத்தில் விழுந்து மாணவர் காயமடைந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் யானையைத் துரத்தினர்.
பின்னர், மாணவர் பிரவீனை மீட்டு, தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, உயிரிழந்த கிருஷ்ணனின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், யானையை மகேந்திரமங்கலம் அருகே உள்ள நாகனூர் வனப் பகுதிக்கு விரட்டினர்.