தமிழக காவல் துறையின் உளவுத்துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் (படம்) மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ.ஜி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை காவலர் நலப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வவர்மா வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
அதே வேளையில் உளவுத்துறை ஐ.ஜி.பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. அந்தப் பொறுப்பை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி கூடுதல் பணியாக கவனிப்பார்.
10 நாள்களில் பணியிட மாற்றம்: தமிழக காவல் துறையில் உளவுத் துறை ஐ.ஜி. பதவி அதிகாரமிக்க பதவியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் உளவுத்துறை ஐ.ஜி. தமிழக முதல்வருடன் தினமும் நேரடித் தொடர்பில் இருப்பார் என்பதால்,இந்தப் பதவிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்தப் பதவியில் இருந்த கே.என். சத்தியமூர்த்தி திடீரென நீண்ட விடுப்பில்
சென்றுவிட்டார். இதனால் காவலர் நலப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை அந்த பதவிக்கு நியமித்து தமிழக அரசு கடந்த 13-ஆம் தேதி உத்தரவிட்டது. அப்போது ஆளும்கட்சியான அதிமுகவில் அசாதாரண சூழ்நிலை நிலவி வந்த நிலையில் உளவுத்துறை பணி பெரும் சவாலாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற சில நாள்களில் மீண்டும் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டிருப்பது, காவல்துறை அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேவிட்சன் 10 நாள்களே உளவுத் துறை ஐ.ஜி.யாக இருந்துள்ளார். ஏற்கனவே, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு மார்ச் வரையில் உளவுத்துறை ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.