சசிகலாவை மதிக்கிறேன்; தீபாவுடன் பிரச்னை இல்லை: தீபக் பேட்டி

அதிமுகவின் பொதுச் செயலர் சசிகலாவை மதிக்கிறேன்; தீபாவுடன் எனக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார்.
சசிகலாவை மதிக்கிறேன்; தீபாவுடன் பிரச்னை இல்லை: தீபக் பேட்டி

அதிமுகவின் பொதுச் செயலர் சசிகலாவை மதிக்கிறேன்; தீபாவுடன் எனக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: அதிமுகவின் தலைமையை ஏற்கும் தகுதி ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் உள்ளது. டி.டி.வி.தினகரனுக்கு இல்லை.
எனது சகோதரி ஜெ.தீபா (ஜெயலலிதாவின் அண்ணன் மகள்) கூட அந்தப் பதவியை அடைவதற்கு முயற்சிக்கலாம். தினகரனுக்கும், வெங்கடேஷுக்கும் பெரிய பொறுப்பைக் கொடுத்ததை அதிமுகவினர் யாரும் ஏற்க மாட்டார்கள்.
அதிமுக உடையக் கூடாது: ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்ப வேண்டும். எந்த நிலையிலும் அதிமுக உடையக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. அதிமுக உடைந்தால், திமுக ஆட்சியைப் பிடித்துவிடும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
பன்னீர்செல்வம் எந்த பதவியையும் கேட்கக்கூடியவர் இல்லை.
சசிகலாவை மதிக்கிறேன்: சசிகலாவை இப்போதும் மதிக்கிறேன். அதே சமயம், சசிகலாவின் குடும்பத்தினர் அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வருவதை ஏற்கமாட்டேன். அதிமுகவின் தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள்.
போயஸ் தோட்டம் இல்லம்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா செலுத்த வேண்டிய அபராத தொகையான ரூ.100 கோடியைச் செலுத்துவதற்கு 3 மாதங்கள் அவகாசம் கேட்க உள்ளோம். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ஜெயலலிதாவின் சொத்துகளை விற்று அந்தப் பணத்தைச் செலுத்துவோம். எந்தச் சொத்துகளை விற்போம் என்பதை இப்போதே சொல்ல முடியாது. ஆனால், நிச்சயம் போயஸ் தோட்டம் இல்லத்தை விற்கமாட்டேன். போயஸ் தோட்ட இல்லம் எங்களுடைய பாட்டி வழியில் வருவதாகும். அந்த இல்லம் எனக்கும் தீபாவுக்கும்தான் சொந்தம். வேறு யாரும் அதற்கு உரிமை கொண்டாட முடியாது.
இதற்காக சட்ட ரீதியாக அணுகப் போவதில்லை. சசிகலாவே எங்களிடம் ஒப்படைப்பார். சசிகலா எங்கள் அம்மாவைப் போன்றவர். அதனால்தான் பெங்களூரில் சிறையில் உள்ள அவரை நேரில் சந்தித்துப் பார்த்து வந்தேன். போயஸ் இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றும் திட்டம் எதுவும் இல்லை.
தீபாவுடன் பிரச்னை இல்லை: தீபாவுடன் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அரசியலில் அவர் பங்கேற்பது அவர் விருப்பம். ஆனால், எனக்கு அரசியலில் எந்த ஆர்வமும் இல்லை. குடும்ப அரசியல் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்கூடதான் குடும்ப அரசியல் செய்கிறார் என்று சொல்ல முடியும் என்றார்.
திடீர் போர்க்கொடி: ஜெயலலிதாவின் அண்ணனுக்கு ஜெ.தீபா, ஜெ.தீபக் என இரு வாரிசுககள் உள்ளனர். ஆரம்பத்திலிருந்தே சசிகலாவின் ஆதரவாளராக தீபக் இருந்து வந்தார். மெரீனாவில் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றபோது தீபக் மட்டும் பங்கேற்றார். கூவத்தூரில் அதிமுகவின் எம்.எல்.ஏ.கள் இருந்தபோது, அங்கும் தீபக்கும் சென்று வந்தார்.
இந்த நிலையில் திடீரென ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தீபக் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com