தேசியக் கொடி வடிவில் கேக் வெட்டியதன் மூலம் தேசியக் கொடியை அவமதித்து விட்டதாக, கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குத் தொடர கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில், கோவையில் உள்ள மசூதி முன்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. அப்போதைய மாவட்ட ஆட்சியராகப் பதவி வகித்த அர்ச்சனா பட்நாயக், துணை ஆணையர் பிரவேஷ்குமார் உள்ளிட்டோர் தேசியக் கொடி வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்ட கேக்கை வெட்டிக் கொண்டாடினர்.
இதன் மூலம் தேசியக் கொடியை அவமதித்ததாகக் கூறி, ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 10 பேர் மீது செந்தில்குமார் என்பவர் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினர் புகாரைப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, கோவை 5-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு செந்தில்குமார் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வகுமார், ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், காவல் துணை ஆணையர் பிரவேஷ்குமார் உள்ளிட்ட 10 பேர் மீது, தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டார்.