மரத்தில் கார் மோதி 3 பேர் சாவு
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே புதன்கிழமை நள்ளிரவு மரத்தின் மீது கார் மோதியதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பட்டுக்கோட்டை அருகேயுள்ள வேப்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி மகன் சிவானந்தம் (36). மன்னார்குடி அருகேயுள்ள திருவண்டுதுறை கலியபெருமாள் மகன் பாரதிமோகன் (38) மற்றும் வடசேரியைச் சேர்ந்த அருண் மகன் கோகுலகிருஷ்ணன்(14) ஆகியோர் புதன்கிழமை இரவு ஒரு காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை பாரதிமோகன் ஓட்டிச் சென்றார்.
நள்ளிரவு 12 மணியளவில் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள காடுவெட்டி பகுதியில் சென்றபோது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில், காரில் பயணம் செய்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸார் சடலங்களை, பிரேத பரிசோதனைக்காக ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.