எண்ணைய் கசிவால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் இடைக்கால நிவாரணமாக வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த இடைக்கால நிவாரணத்துக்கான மொத்த செலவினமாக ரூ.15 கோடியை முழுவதுமாக தமிழக அரசு ஏற்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார். எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு சரக்குக் கப்பல்கள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாயின. அதில், ஒரு கப்பலில் இருந்த எண்ணெய் கசிந்து திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் கடற்கரை பகுதிகளில் பரவியது.
இந்த எண்ணெய் கசிவின் காரணமாக மூன்று மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மீனவர்களுக்கு ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்புகளை களஆய்வு செய்து உரிய நிவாரணத்தை சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசின் மூலமாக பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி, கப்பல் நிறுவனங்களின் காப்பீட்டு நிறுவனத்தின் கேட்புப் படிவங்கள் மீனவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெறும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து உரிய நிவாரணம் பெறுவதற்கு அதிக காலதாமதம் ஏற்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த, எண்ணெய் கசிவால் பாதிப்புக்குள்ளான 30 ஆயிரம் மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் இடைக்கால நிவாரணமாக அளிக்கப்படும்.
இந்த இடைக்கால நிவாரணத்துக்காக மொத்த செலவினமான ரூ.15 கோடியை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்.
மேலும், எர்ணாவூர், நொச்சிக்குப்பத்தில் ரூ.75 லட்சம் செலவில் இரண்டு மீன் சந்தைகள் அமைப்பதற்கு தமிழக அரசு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.