சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்த நான் உத்தரவிடவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
அதிமுகவில் தனி அணியாக பிரிந்துள்ள ஓ. பன்னீர்செல்வம், தமிழ் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "மருத்துவமனையில் ஜெயலலிதாவுடன் சசிகலா மட்டும்தான் இருந்தார். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதி விசாரணை அறிக்கை வந்தால்தான் மக்கள் சந்தேகம் தீரும். அந்த 75 நாட்களில் ஒரு முறை கூட ஜெயலலிதாவை சந்திக்கவில்லை.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற எனக்கு, பணியை தொடர முடியாத அளவுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர். எம்எல்ஏ, எம்.பி.க்களைக் கொண்டு பிரச்னைகளை கொடுத்தனர்" என்று கூறினார்.
மேலும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது போலீஸ் தடியடிக்கு நான் உத்தரவிடவில்லை. சூழ்நிலையைப் பொருத்துத்தான் காவல்துறையினர் செயல்பட்டனர். வன்முறையில் யார் ஈடுபட்டிருந்தாலும் தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கூவத்தூர் விடுதியில் இருந்த போது கூட பல எம்எல்ஏக்கள் எனக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினர். தற்போது, மக்களை சந்திக்க முடியாத நிலை உள்ளதாக எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர். தற்போதைய முதல்வர் யாருடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதை மக்கள் நன்கு அறிவர்.
மக்களின் முடிவுகளையும், எண்ணங்களையும் யாராலும் கணிக்க முடியாது. தேர்தல்கள்தான் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்றன. முதல்வர் பதவியில் என்னால் முடிந்த அளவுக்கு மனநிறைவோடு பணியாற்றினேன் என்றும் அவர் கூறியுள்ளார்.