மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அரசு சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றதற்கு திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: மரம் வளர்ப்போம் வளம் பெறுவோம் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்துள்ளார். இதற்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் இதுபோல அறிவிக்கப்பட்டு, இதுவரை நடப்பட்ட இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளின் கதி என்னவென்றே தெரியாத நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு, தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவர் பெயரில் மரம் நடும்விழா திட்டத்தை இந்த வருடம் தொடங்கி வைப்பதன் மூலம், சமுதாயத்தில் தவறான முன்னுதாரணத்தை அதிமுக அரசு ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸ்: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்த நாளை அரசு சார்பில் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது. காந்தியடிகளின் பிறந்த நாளுக்காகவோ, இந்தியாவின் விடுதலை நாள் அல்லது குடியரசு நாளுக்காகவோ இத்தனை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் அதற்காக மகிழ்ச்சி அடையலாம். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்காக விழா நடத்துவதை ஏற்க முடியாது.