தமிழகத்தில் விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று தேமுதிக மகளிர் அணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாகப் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. இதனால், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகள் மிகப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளன. ஆட்சியைக் கவிழ்க்க தினமும் ஒரு நாடகம் நடந்து வருகிறது.
ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டத்தை மக்களின் கருத்தைக் கேட்ட பிறகே செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.
இந்தப் பேட்டியின்போது சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் தினகரன் உள்ளிட்ட அக்கட்சியினர் உடனிருந்தனர்.