வானூர்தி உதிரிபாகங்கள் உற்பத்தி: நிலம் வேண்டி அரசிடம் 7 நிறுவனங்கள் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டு வரும் வானூர்தி தொழிற்பூங்காவில் நிலம் வேண்டி 7 நிறுவனங்கள் தமிழக அரசை அணுகியுள்ளன.

ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டு வரும் வானூர்தி தொழிற்பூங்காவில் நிலம் வேண்டி 7 நிறுவனங்கள் தமிழக அரசை அணுகியுள்ளன.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் வானூர்தி தொழிற் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து இந்தப் பூங்காவுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை சிப்காட் நிறுவனம் ஏற்கெனவே பெற்றுள்ளது. இதையடுத்து, சிப்காட் நிறுவனம் நில மேம்பாட்டுப் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பூங்காவில் உட்புறச்சாலை, நீர் வழங்கல் வசதி, வடிகால், தகவல் தொடர்பு வசதிகள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.30 கோடியை சிப்காட் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.
இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 14 வானூர்தி உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சிப்காட் பூங்காவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏழு நிறுவனங்கள் இந்தப் பூங்காவில் நிலம் கேட்டு டிட்கோவை அணுகியுள்ளது.
இந்தப் பூங்காவில் டிட்கோ நிறுவனம் 11 ஏக்கரில் வானூர்தி உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்காக உயர் கணினி பொறியியல் மற்றும் வடிவமைப்பு மையத்தை ரூ.350 கோடி முதலீட்டில் அமைத்து வருகிறது. டைடல் பார்க் நிறுவனம் 12 ஏக்கர் நிலப்பரப்பில் பல் அடுக்கு உற்பத்திக் கூடத்தையும் அமைக்க உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் ஜூன் அல்லது ஜூலையில் தொடங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com