ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மக்கள் நலக்கூட்டியக்கம் சார்பில் பிப்ரவரி 28 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நலக்கூட்டியக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு அப்பகுதி மக்களிடமும், தமிழகத்தின் இதர பகுதியில் உள்ளோரிடமும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 6000 அடிக்கு ஆழ்துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுத்திடும் மத்திய அரசின் திட்டத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு விடும்.
5 லட்சம் மக்களையும், விவசாயத்தையும், நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அப்பகுதி மக்களிடம் எந்தவிதக் கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் நடத்தாமல் தன்னிச்சையான முறையில் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசை மக்கள் நலக் கூட்டியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
எனவே, மத்திய அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டும். தமிழக அரசு மத்திய அரசாங்கத்தை இத்திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 28-2-2017 அன்று காலை 10 மணி அளவில் ஆலங்குடியில் மக்கள் நலக்கூட்டு இயக்கத்தின் தலைவர்கள் தோழர்கள் ஜி.ராமகிருஷ்ணன், ஆர்.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மக்கள் நலன் காக்கும் இந்த கண்டன இயக்கத்திற்கு அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.