உடுமலை வனப் பகுதியில் கடும் வறட்சி: குடிநீரைத் தேடி அலையும் யானைகள் கூட்டம்

உடுமலை வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், குடிநீரைத் தேடி யானைகள் கூட்டமாக அலைந்து திரிகின்றன.
குடிநீருக்காக அமராவதி அணைக்குள் குழிகளைத் தோண்டும் யானைகள். (வலது) உடுமலை-மூணாறு சாலையைக் கடந்து செல்லும் யானைகள் கூட்டம்.
குடிநீருக்காக அமராவதி அணைக்குள் குழிகளைத் தோண்டும் யானைகள். (வலது) உடுமலை-மூணாறு சாலையைக் கடந்து செல்லும் யானைகள் கூட்டம்.

உடுமலை வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், குடிநீரைத் தேடி யானைகள் கூட்டமாக அலைந்து திரிகின்றன.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை, அமராவதி ஆகிய வனச் சரகங்களில் புலி, சிறுத்தைப் புலி, யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், வனப் பகுதியில் கடுமையான வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
உணவு, குடிநீர்த் தேவைகளுக்காக அடர்ந்த வனப் பகுதிகளைவிட்டு யானைகள் கூட்டமாக வெளியே வரத் தொடங்கியுள்ளன. கேரள எல்லைக்குள் இருந்து யானைகள் கூட்டமாகத் தமிழக வன எல்லைக்குள் வருகின்றன.
யானைகள் குடிநீருக்காக உடுமலை-மூணாறு சாலையைக் கடந்து, அமராவதி அணையை நோக்கிப் படையெடுத்து வருகின்றன. ஆனால், அமராவதி அணை தற்போது வறண்டு கிடக்கிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழையில்லாததால், அணைக்கு நீர்வரத்து இல்லை. உடுமலை, அமராவதி வனப் பகுதிக்குள் வனத் துறையினரால் அமைக்கப்பட்டிருந்த தடுப்பணைகளும் வறண்டுவிட்டன. யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் குடிநீர் கிடைக்காமல் அலைபாய்கின்றன.
இது குறித்து உடுமலை, அமராவதி வனத் துறையினர் கூறியதாவது: யானைகள் கூட்டமாக வந்து, அமராவதி அணைக்குள் ஆங்காங்கே குழிகளைப் பறித்து, அதில் கிடைக்கும் குடிநீரைப் பருகிச் செல்கின்றன. ஒருசில வாரங்களில் மழை பெய்தால், அமராவதி அணைக்குத் தண்ணீர் வரத்து ஏற்படும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com