சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை செய்யவேண்டும் என்று போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க மாணவர்களும், இளைஞர்களும் வரவேண்டும் என்று கமல்ஹாசன் டுவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக பிரச்சினைகள், அரசியல் சூழ்நிலைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு அளித்து கருத்து தெரிவித்த வந்த கமல்ஹாசன், அடுத்தாக தமிழக அரசியலில் நிகழ்ந்த அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் தனது கருத்தையும் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், தற்போது நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல் தனது டுவிட்டர் பக்க பதிவில், பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும்’ என்று பதிவிட்டுள்ளார்.
மற்றோரு பதிவில், எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனத்தின் வெற்றியும், இயற்கையை அழிப்பது மற்றும் ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதில் இருந்துமே தொடங்குகிறது. தமிழக மக்களே விழிப்புணர்வுடன் இருங்கள் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு எனது பாராட்டுக்கள். நீங்கள் அமைதியைக் கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ள கமல், உங்களைவிட பெரியவர்கள் உங்களை சமமாக மதிப்பதை உணருங்கள் என்று கூறியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.