கொலையுண்ட கைதி உடலை வாங்க உறவினர்கள் 3ஆவது நாளாக மறுப்பு

காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டவரின் உடலை வாங்க, அவரது உறவினர்கள் 3ஆவது நாளாக மறுத்தனர்.

காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டவரின் உடலை வாங்க, அவரது உறவினர்கள் 3ஆவது நாளாக மறுத்தனர். தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் அருகேயுள்ள புல்லாவெளி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்ற சிங்காரம் (50). இவர், தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் நிறுவனர்-தலைவர் பசுபதிபாண்டியனின் ஆதரவாளர்.
சில வழக்குகளில் கைதாகி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த இவரை, ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக, கடந்த 24ஆம் தேதி போலீஸார் தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது கே.டி.சி. நகரில் மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இரு இளைஞர்களைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள். மேலும், 11 பேரை தேடி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சிங்காரத்தின் உடலை வாங்க அவரது உறவினர்கள் 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மறுத்தனர்.
ஆணையரிடம் மனு: மேலும், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிங்காரத்தின் மனைவி பார்வதி அளித்த மனு:
ஏழ்மை நிலையில் உள்ள எங்களது குடும்பம் சிங்காரத்தை இழந்து தவித்து வருகிறது. இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சிங்காரத்தின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், தகுந்த இழப்பீடும் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com