வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில், நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி வலை, மீன்கள் மற்றும் உபகரணங்களை சனிக்கிழமை இரவு பறித்துச் சென்றனர்.
நாகை மாவட்டம், கோடியக்கரையில் மீன்பிடி பருவக் காலத்தையொட்டி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இங்கு தாற்காலிகமாக தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாகை மாவட்டம், ஆரியநாட்டுத்தெருவைச் சேர்ந்த அன்பு மகன் சிவசந்திரன் (29) என்பவருக்குச் சொந்தமான கண்ணாடியிழைப் படகு, கோடியக்கரை படகுத்துறையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை கடலுக்கு சென்றது.
இதில், ஆரியநாட்டுத்தெருவைச் சேர்ந்த அன்பு மகன் குணபால் (20), கார்த்திகேசன் மகன் கேசவன் (40), நம்பியார்நகர் சுப்பிரமணியன் மகன் லெட்சுமணன் (40), தரங்கம்பாடியை அடுத்த பெருமாள்பேட்டை ராமசாமி மகன் சக்திபாலன் (20), சீனிவாசன் மகன் ஆறுமுகம் (60) ஆகியோர் இருந்தனர்.
இந்த 5 மீனவர்களும், கோடியக்கரைக்கு தென்கிழக்கே வலை விரித்து சனிக்கிழமை பகல் மீன்பிடிக் கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு 5 படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் எனக் கருதப்படும் 15-க்கும் மேற்பட்டோர், படகில் ஏறி மீனவர்களை தடியால் தாக்கி அச்சுறுத்தினராம்.
மேலும், மீனவர்கள் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, 2 செல்லிடபேசிகள், ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், மீன்பிடி வலைகளை பறித்துச் சென்றனராம்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் 5 பேரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோடியக்கரையில் கரை சேர்ந்தனர். இவர்களிடம் தனிப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
கோடியக்கரைக்கு அப்பால் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், கடந்த 21ஆம் தேதி முதல் இலங்கை மீனவர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.