குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே திங்கள்கிழமை கார்-லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கணேசன் (47). இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம், வட்டியூர்காவு என்ற பகுதியில் பழைய இரும்புக் கடை தொடங்கி நடத்தி வந்ததுடன், அங்கேயே குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு, கணேசன் தனது மனைவி முத்துமாரி (40), மகன் கார்த்திகேயன் (19), மகள் கார்த்திகா (16) ஆகியோருடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர், திங்கள்கிழமை ஒரு காரில் தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலத்துக்குச் சென்று கொண்டிருந்தார். காரை வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த ஆசிக் (28) ஓட்டி வந்தார்.
குமரி மாவட்ட எல்லையான முப்பந்தலை அடுத்த ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை அருகே கார் வந்தபோது எதிரே வந்த மணல் லாரி மீது திடீரென மோதியது. இதில், கணேசன், அவரது மகள் கார்த்திகா மற்றும் கார் ஓட்டுநர் ஆசிக் ஆகியோர் பலத்த காயமடைந்து அதே இடத்தில் இறந்தனர்.
கணேசனின் மனைவி முத்துமாரி மகன் கார்த்திகேயன் ஆகியோர் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.