திருநெல்வேலியில் காவல் வாகனத்தை மறித்து கொலை செய்யப்பட்ட கைதியின் உடல், திங்கள்கிழமை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அவரது குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், பழைய காயல் அருகேயுள்ள புல்லாவெளி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்ற சிங்காரம் (50). தேவேந்திர குலவேளாளர் அமைப்பின் தலைவர் பசுபதிபாண்டியனின் ஆதரவாளரான இவர், குற்ற வழக்குகளில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக பாலசுப்பிரமணியன் என்ற சிங்காரத்தை ஆயுதப்படை போலீஸார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
பாளையங்கோட்டை அருகே சென்றபோது கே.டி.சி. நகரில் போலீஸ் வாகனத்தை வழிமறித்து 13 பேர் கொண்ட கும்பல் சிங்காரத்தை வெட்டிக் கொலை செய்தது. இதையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேலும், சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸார் 4 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 13 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். எனினும், இவ் வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
நிதியுதவி : இதற்கிடையே கொலையாளிகளைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிங்காரம் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து வந்தனர். திங்கள்கிழமை சிங்காரத்தின் மனைவி பார்வதி (37) தனது 2 மகள்கள், பசுபதிபாண்டியனின் சகோதரி மற்றும் உறவினர்களுடன் ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிங்காரத்தின் மனைவியிடம் ரூ. 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 க்கான காசோலையை திருநெல்வேலி கோட்டாட்சியர் பெர்மி வித்யா வழங்கினார். இதையடுத்து சிங்காரத்தின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.