புது தில்லி: மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் விரைவில் மாற்றுப் பாதையில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி.
அப்போது அவரிடம், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த முதல்வர், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை மேற்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம்.
மதுரவாயல் பகுதியில் பறக்கும் சாலை அமையும் பாதை நேர்செய்ய வேண்டியுள்ளது. முக்கிய அதிகாரிகள் அதைப் பார்வையிட்டு, மாற்றுப் பாதையில் பறக்கும் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தப் பிறகு, 6 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.