கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில், நிகழாண்டின் (2017) முதல் சூரிய உதயத்தை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர்.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனம், சூரியன் உதயமாகும் காட்சியை தெளிவாகப் பார்க்கலாம் என்பதால் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
முக்கடல் சங்கமம் பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியையும், மேற்குப் பகுதியில் சூரியன் அஸ்தமிக்கும் காட்சியையும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பார்த்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு நிறைவடைந்து 2017ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், இந்தாண்டின் முதல் சூரிய உதயத்தை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர்.
பயணிகள் கூட்டம்: புத்தாண்டை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. சுசீந்திரம், கொட்டாரம், விவேகானந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சன்னதி தெரு, முக்கடல் சங்கமம், காந்தி மண்டப சாலை, சூரிய அஸ்தமனப் பூங்கா மற்றும் பேரூராட்சிப் பூங்கா உள்ளிட்டப் பகுதிகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.