காவித் துணியை அணிந்து கொண்டு புரட்சி செய்தவர் ராமானுஜர் என்று ஊடகவியலாளர் மை.பா. நாராயணன் பேசினார்.
சென்னை புத்தக கண்காட்சி வளாகத்தில் தினந்தோறும் உரை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை நடைபெற்ற உரை நிகழ்ச்சியில் "அற்புத மகானும் அர்த்தமுள்ள ஆயிரமும்' என்ற தலைப்பில் ஊடகவியலாளர் மை.பா. நாராயணன் பேசினார். வெற்றி நமக்கே என்ற தலைப்பில் சிறுமி ரித்திகா அழகம்மை பேசினார்.
நிகழ்ச்சியில் மை.பா. நாராயணன் பேசியது: ராமானுஜர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தாலும் இன்றும் வழிகாட்டியாக இருக்கிறார். அன்றைய காலத்தில் காவித் துணியை அணிந்து கொண்டு புரட்சி செய்தவர் அவர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதியை ஒழிக்க பாடுபட்டவர். அவர் குறிப்பிட்ட ஒரு இனத்தின் பிரதிநிதியல்ல. சமூகத்தின் பிரதிநிதி. தற்போதும் பல கிராமங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை.
ஆனால் அப்போதே தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றவர் அவர்.
சமுதாயத்தையும் சமயத்தையும் செப்பனிட்டவர் அவர். ராமானுஜரின் சேவையில் மனிததேயமும் இருந்தது என்றார் மை.பா. நாராயணன். இந்த நிகழ்ச்சியில் பபாசி துணை இணைச் செயலர் குருதேவா, செயற்குழு உறுப்பினர் ஷைலஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.