சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு 'பீட்டா' அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
'பீட்டா' அமைப்பு தொடர்ந்த வழக்கின் காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதை நீக்க கோரி தமிழகமெங்கும் பல்வேறு தரப்பினர் நடத்தும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் 'பீட்டா' அமைப்பு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு முழுமையாக அமல்படுத்த ப்படுவதை உறுதி செய்யுமாறு கோரியுள்ளது.
முன்னதாக ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தில் மத்திய அரசு அவசர சட்டம் எதையும் பிறப்பித்தால் அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று குடியரசுத்தலைவருக்கு இந்த அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.