சென்னை: ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டங்கள் மாநிலம் முழுவதும் வலு பெற்று வரும் சூழ்நிலையில் அதிமுக எம்பிக்கள் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரை நாளை சந்நிதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக தமிழ்நாட்டில் மூன்று வருடங்களாக பொங்கல் சமயத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. தற்பொழுது ஜலல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மூன்று நாட்களாக போராடிவருகின்றனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து பேச வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டை நடைபெறச் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க அவசர சட்டம் நிறைவேற்றக் கோரி அதிமுக எம்பிக்கள் அனைவரும் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரை நாளை சந்நிதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் நாளை காலை 10 மணி அளவில் பிரதமரை சந்திக்க உள்ளனர். பின்னர் அவர்கள் குடியரசுத் தலைவரை சந்திப்பார்கள்.