தமிழன் என்ற அடையாளத்தை எங்கெல்லாம் தவற விட்டோமோ அவற்றைப் பெற வேண்டிய சரியான தருணம் இது என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்த் திரை அமைப்புகளின் சார்பாக சென்னையில் வியாழக்கிழமை ஆர்பார்ட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட இயக்குநர் பாரதிராஜா பேசியது: காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு தமிழர்கள் போராடிப் பார்த்தார்கள். சில நாட்களுக்கு அப்போராட்டம் அடங்கிவிடும். நமது உணர்வுகளுக்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது.
தற்போது இந்த மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம்தான் மானமுள்ள தமிழனுக்கான போராட்டம்.
மாணவர் சமுதாயத்துக்கு தலை வணங்குகிறேன்: 1962-ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்புக்குத்தான் இவ்வளவு பெரிய பிரளயம் ஏற்பட்டது. எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் தற்போது மீண்டும் அதே போன்றதொரு பிரளயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவர் சமுதாயத்துக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழன் என்ற அடையாளத்தை எங்கெல்லாம் தவற விட்டோமோ அவற்றைப் பெற வேண்டிய சரியான தருணம் இது.
டெல்டா விவசாயிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில் அதற்கு ஒரு முடிவு பிறக்க வேண்டும். தமிழகத்தின் பண்பாடு, கலாசாரத்துக்கு எங்கேயும் ஒரு கீறல் ஏற்பட்டாலும், நீங்கள் எழுந்து நின்று போராட வேண்டும். நமது அனைத்து உரிமைகளையும் பெற்றுவிட்டுத்தான் இந்தப் போராட்டத்தை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார் பாரதிராஜா.