ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ சமுதாயத்துக்கு தமிழினம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் செய்தியாளர்களுக்கு அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
ஜல்லிக்கட்டு தடைக்கு காங்கிரஸ் கட்சியும் திமுகவுமே காரணம். காளைகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கும்போது தடுக்கத் தவறியது இந்த இரு கட்சிகளும்தான்.
தமிழகத்தில் அதிமுக அரசுக்கு எந்த வகையில் கேடு விளைவிக்கலாம் என பலர் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்போடு பதில் சொல்கிறார். பிரதமர் சட்டபூர்வ நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். மாணவர்கள் போராட்டத்துக்கு யாரும் ஆதரவு தெரிவிக்க வேண்டியதில்லை. இது, அவர்களாக நடத்துகிற போராட்டம். இந்தப் போராட்டக் களத்தில் ஈடுபட்டிருக்கிற மாணவ சமுதாயத்துக்கு தமிழினம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது என்றார் அவர்.