சென்னை: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்திருக்கும் அவசரச் சட்டம் மூலமாக காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளை நீக்கப்பட்டுள்ளது.
இந்த அவசரச் சட்டம் அடுத்த 6 மாத காலத்துக்கு அமலில் இருக்கும்.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த இதுவரை இருந்த தடை இந்த அவசரச் சட்டம் மூலம் தகர்ந்துள்ளது. இது நிரந்தரத் தீர்வாக இல்லாமல் இருந்தாலும், தமிழக மக்களின் ஒன்றிணைந்த குரலுக்குக் கிடைத்த முதல் மாபெரும் வெற்றி என்றே கருதலாம்.
தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுக்க போராட்டங்கள் தீவிரமடைந்தன.