ஜல்லிக்கட்டு போட்டி தடையின்றி நடைபெறுவதற்கு தற்போது சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதா முழுமையாக உதவும் என நம்பவில்லை என்று சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறினார்.
சட்டமசோதா குறித்து கே.ஆர்.ராமசாமி மேலும் பேசியது:
சட்டமசோதாவை முழு மனதுடன் ஏற்கிறேன். சில சந்தேகங்கள் இருக்கின்றன. மாணவர்கள் போராட்டம் நடத்தும் வரை ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு தமிழக அரசு ஏன் துரித நடவடிக்கை எடுக்கவில்லை? என்றார்.
அப்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு பேசும்போது, "திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான் காட்சியப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளையும் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாகவே ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை' என்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர் அபுபக்கர், மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் ஆகியோர் மசோதாவை வரவேற்று பேசினர்.
பார்வையாளர் மாடத்தில்...: ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ராஜசேகர், கார்த்திகேய சிவசேனாபதி, ராஜேஷ், அம்பலத்தரசு, ஹிப் ஹாப் ஆதி, இயக்குநர் கவுதமன் ஆகியோர் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து கவனித்தனர்.