தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் திங்கள்கிழமை அவரது அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
போடி சுப்புராஜ் நகர் சிட்னி விளையாட்டு மைதானம் அருகே உள்ள தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட போவதாகவும், அனைவரும் அங்கு வரவேண்டும் என்றும் சிலர் கட்செவி அஞ்சல் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரப்பினர். இதையடுத்து போடி டி.எஸ்.பி. பிரபாகரன், போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் சேகர் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையையடுத்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 2 இளைஞர்களை பிடித்து போலீஸார் விசாரித்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை முதலே போடியில் 4 டி.எஸ்.பி.க்கள் மற்றும் ஆய்வாளர்கள் போடி நகர் முழுவதும் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.