சென்னை: மத்திய மற்றும் மாநில அரசுகளின் இரட்டை வரிவிதிப்பு முறையினைக் கண்டித்து நாளை முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் இயங்காது என்று தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மைலாப்பூரில் இன்று தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் இதர நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது அபிராமி ராமநாதன் கூறியதாவது:
மத்திய மற்றும் மாநில அரசுகளின் இரட்டை வரிவிதிப்பு முறையினைக் கண்டித்து நாளை முதல் தமிழகத்தில் 1000 தியேட்டர்கள் இயங்காது. இத்தகைய இரட்டை வரிவிதிப்பு முறையினை நீக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை ஏற்கப்படும் வரை தியேட்டர்கள் இயங்காது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மொத்தமாக 58% வரியை எங்கள் மீது வரி விதிக்கிறது.
மற்ற மாநிலங்களில் உள்ளது போன்றே இங்கும் சீரான வரிவிதிப்பு முறையானது கடைப்பிடிக்கப்பட வேண்டும் சினிமா தியேட்டர்களுக்கான கட்டணமானது ரூ.50 முதல் ரூ.200க்குள் நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ரூ.100 வரையிலான டிக்கெட் கட்டணத்திற்கு 18% வரியும், ரூ.101-இலிருந்து 28% வரியும் விதிக்கப்படுகிறது இத்துடன் கேளிக்கை வரி 30% என நாங்களமொத்தம் 58% வரி செலுத்துகிறோம்
எங்களது போராட்டமானது ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையினை எதிர்த்து அன்று. கேளிக்கை வரி விதிப்பு முறையினை எதிர்த்தே எங்களின் போராட்டமானது நடத்தப்படுகிறது. 100 ரூபாய் வருமானம் வந்தால் அதற்கு 58 ரூபாய் வரியாக செலுத்த வேண்டிய நிலை தற்பொழுது உள்ளது.
இவ்வாறு ராமநாதன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.