புது தில்லி: தமிழகத்தில் அனைத்து விவசாயிகளின் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அனைத்து விவசாயிகளின் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று இந்த இடைக்காலத் தடையை பிறப்பித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகள் உட்பட பல்வேறு வங்கிகளில் கடன் பெற்ற சிறு குறு விவசாயிகளின் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆனால், 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிளுக்கும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விவசாயி அய்யாகண்ணு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, தமிழகத்தில் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில், 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த உத்தரவுக்கு தடை விதித்தும், இது குறித்து விவசாயி அய்யாகண்ணு உள்ளிட்டோர் 4 வார காலத்துக்குள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.