ஜிஎஸ்டி வரியால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க ஆரணி செல்லும் வழியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரம் வந்தார். முதல்வரை சென்னை }பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பொன்னேரிக் கரை அருகே மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது: ஜிஎஸ்டி வரியால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. வியாபாரிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும்.
பொதுமக்களுக்கு பாதிப்பு வரும் எந்தத் திட்டமாக இருந்தாலும் தமிழக அரசு அதை ஏற்காது என்றார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் அருண்தம்புராஜ், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் வாலாஜாபாத் கணேசன், எம்.பி. மரகதம் குமரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.