தமிழ்க் காப்பியமாம் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள் குறித்து தமிழைத் துறக்காத துறவி என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து தஞ்சாவூரில் ஜூலை 7-ம் தேதி உரையாற்றுகிறார்.
தமிழ் இலக்கிய முன்னோடிகள் என்ற தலைப்பில் பாரதிதாசன், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், பாரதியார், புதுமைப்பித்தன், கம்பர், அப்பரடிகள், திருவள்ளுவர், வள்ளலார் ஆகியோர் குறித்து கவிஞர் வைரமுத்து ஏற்கெனவே சென்னை, மதுரை, கோவையில் உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மணிமண்டபம் அருகேயுள்ள தமிழ் அரசி மண்டபத்தில் தினமணி சார்பில் ஜூலை 7-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இளங்கோவடிகள் குறித்து தமிழைத் துறக்காத துறவி என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமை வகிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்கங்கள், இளங்கோவடிகள் மன்றத்தினர் உள்ளிட்ட இலக்கிய அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள், தினமணி வாசகர்கள், கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.