ஜிஎஸ்டி குளறுபடிகள் 6 மாதத்தில் சரியாகும்; ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது: சுப்ரமணியன் சுவாமி
தூத்துக்குடி: மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் ஜிஎஸ்டி-யில் உள்ள குளறுபடிகள் 6 மாதத்தில் சரி செய்யப்படும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ஆழ்வார் திருநகரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இன்று காலை சுப்ரமணியன் சுவாமி தனி விமானத்தில் தூத்துக்குடி வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக ஆதரவு வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு 67% வாக்குகள் உள்ளன. எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர்தான் வெற்றிபெறுவார்.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி-யில் சில குறைபாடுகள் உள்ன. தமிழ் மருந்துகளுக்கு 12 சதவீதமும், ஆங்கில மருந்துகளுக்கு 3 சதவீதமும் வரி விதிக்கப்பட்டிருப்பது சரியல்ல. இந்த குளறுபடிகள் 6 மாதத்தில் சரி செய்யப்படும் என்றார்.
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது. அவ்வாறு வந்தால் அவருக்குத் தான் ஆபத்து என்று பதிலளித்தார்.
அதிமுகவின் தற்போதைய நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த சுப்ரமணியன் சுவாமி, அதிமுகவில் மூன்று, நான்கு அணிகள் எல்லாம் இல்லை. சசிகலா தலைமையிலான ஒரே அணிதான் உள்ளது என்று கூறினார்.