காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் உரிய நேரத்தில் நிரப்பப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேசியது:
காவல் துறையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. ஐக்கிய நாடுகள் 450 பேருக்கு ஒரு காவலர் என்ற அளவில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அந்தக் கணக்கின்படி பார்த்தால் இன்னும் 70 ஆயிரம் காவலர்கள் பணியில் அமர்த்த வேண்டும். அந்த அளவுக்கு காவலர்கள் இல்லாததால்தான் சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது என்றார்.
அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்: திமுக ஆட்சியிலும் இதே அளவில்தான் காவலர்கள் இருந்தனர். ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டுமே இதுபோன்ற நிலை இருப்பதுபோல உறுப்பினர் கூறுகிறார். காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் உரிய நேரத்தில் நிரப்பப்படும் என்றார்.
ஜெ.அன்பழகன்: மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப காவலர்களை நியமிக்க வேண்டும்.
முதல்வர்: மக்கள் தொகை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. எனினும், காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்.
ஜெ.அன்பழகன்: மக்கள் தொகை அதிகரிக்கவில்லை என்று முதல்வர் கூறுகிறார். 2011- ஆம் தேர்தலைவிட 2016 தேர்தலில் 85 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர் என்பதை முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, கோடிக்கணக்கில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. , காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.