சென்னை: தமிழகத்தில் வெப்பச் சலனத்தின் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், தமிழகம் மற்றும் புதுவரையில் இன்று மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று காலை முதலே வெயில் வாட்டிவந்தது. இந்நிலையில் இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில், சென்னையில் ஒரு சில இடங்களில் மழையும், வானம் மேகமூட்டத்துடனும் காணப்படும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால் விவசயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவை தாண்டியும் பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல் சிதம்பரம், நாகப்பட்டினம், வேலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவு முதல் பரவலாக மழைபெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால், சென்னை முழுவதும் குளிச்சியான சூழல் நிலவுகிறது. இருப்பினும், கடுமையான மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
மீனம்பாக்கத்தில் 5 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 1.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர் உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு ஓரளவுக்கு குறைந்துள்ளது.