கதிராமங்கலம் பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கதிராமங்கலம் நிலத்தடி நீர் ஆய்வறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் அவர், மேலும் கூறியது: தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டு வரும் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. விவசாய நிலங்கள் பாழ்படுகின்றன. இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கதிராமங்கலத்தில் நிலத்தடி நீரை பகுப்பாய்வு செய்த போது, அமிலத்தன்மை அதிகரித்து, அதிக திடப்பொருள்கள் கொண்ட கலங்கலான நீராக, குடிக்க இயலாததாக உள்ளது தெரியவந்துள்ளது. இந்த நீரைப் பயன்படுத்தினால் புற்றுநோய், தொற்று நோய் ஏற்படும் அபாயங்கள் உள்ளன. மக்களை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற விடமாட்டோம். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் என்றார்.