பத்திரப் பதிவு கட்டணம் படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
வணிக வரித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ராமர் பேசும்போது பத்திரப்பதிவு கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பத்திரப்பதிவு துறை அதே நிலையில்தான் இருக்கப் போகிறது. பயன் எதுவும் இல்லை. எனவே, அந்தக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றார்.
அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி குறுக்கிட்டுக் கூறியது: நிலத்தின் சந்தை வழிகாட்டி மதிப்பு 33 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் ரூ.1 லட்சம் மதிப்புடைய நிலத்தின் மதிப்பு ரூ.67,000 அளவுக்கு வந்துவிடுகிறது. இதனால் பத்திரப்பதிவு கட்டணமும் குறையக்கூடிய நிலை உள்ளது. இது பதிவு செய்யபவர்களுக்கு ஒரு சேமிப்பைப் போல பயன் அளிக்கக் கூடியதாகும்.
மேலும், தற்போது அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் மூலம் வருவாய் இழப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே பத்திரப்பதிவு கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் வருவாய் அதிகரிக்கும்போது பத்திரப்பதிவு கட்டணமும் படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கட்டணம் அதிகரித்துவிட்டதால் பத்திரப் பதிவு நடைபெறவில்லை என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை. ஒரே நாளில் 15 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.