குமரி மாவட்டத்தில் மழை பொய்த்து வரும் நிலையில் திற்பரப்பு அருவி மீண்டும் வறண்டுள்ளது.
மாவட்டத்தில் ஜூன் மாதம் தொடங்கி தீவிரமாகப் பெய்ய வேண்டிய தென்மேற்குப் பருவமழை, தற்போது வரை அதன் தீவிரத்தைக் காட்டவில்லை. ஏறக்குறைய பொய்த்த நிலையிலேயே மழையின் நிலை உள்ளது.
கடந்த மாத இறுதியில் சுமாராக பெய்த மழையின் காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளிலும் சிறிதளவு நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக மழை போக்கு காட்டி வருகிறது. அவ்வப்போது ஓரிரு துளிகள் விட்டு ஓய்ந்து விடுகிறது. இதனால் ஆறுகளில் நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது.
திற்பரப்பு அருவிக்கு வரும் கோதையாற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், இந்த அருவி கிட்டத்தட்ட வறண்ட நிலைக்கு சென்றுள்ளது. அருவியில் இரு ஓரங்களிலும் மட்டுமே சிறிதளவில் தண்ணீர் கொட்டுகிறது. அருவியின் மையப்பகுதி முற்றிலும் வறண்டுள்ளது.
அருவியின் கீழ்ப்பகுதியில் மட்டுமே தண்ணீர் விழுவதால் அப்பகுதியில் ஆண்கள் முண்டியடித்தும், காத்திருந்தும் குளித்து செல்கின்றனர். அதேவேளையில் பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் மிகக்குறைவாக விழுவதால் பெண்கள் திருப்தியாக குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அருவியில் தண்ணீர் இல்லாத போதும் இங்குள்ள சிறார் நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரம்பிக் கிடப்பதால் சிறார்கள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.