அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுப் பதிவை ரத்து செய்யக் கோரி அதிமுக (அம்மா அணி) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட் என்ற பெயரில் ஒரு தனியார் நிறுவனத்தை டி.டி.வி.தினகரன் நடத்தி வந்தார். இந்த நிறுவன இயக்குநரான டிடிவி தினகரன், ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி, முறையான வழிமுறைகளைப் பின்பற்றாமலும் ஒரு கோடிக்கு மேல் (1,04,95,313) அமெரிக்க டாலரை லண்டனில் உள்ள ஒரு வங்கிக்கு அனுப்பியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேபோன்று, ரிசர்வ் வங்கி அனுமதியின்றி ஹோட்டல் கட்டுவதற்கு 36,36,000 அமெரிக்க டாலர், 10 ஆயிரம் பவுண்ட் முதலீடு செய்தததாகவும், டிடிவி தினகரன் மீது அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ்(பெரா) அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த இரு வழக்குகளின் விசாரணையும் எழும்பூர் இரண்டாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த இரு வழக்குகளிலும் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, அரசுத் தரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணை தொடங்கியது. இந்த நிலையில், குற்றச்சாட்டு பதிவுக்கு முன்பு தனது தரப்பு வழக்குரைஞர் வாதத்தை கீழமை நீதிமன்ற நீதிபதி கேட்கவில்லை. ஆகையால், தன் மீதான குற்றச்சாட்டுப் பதிவை ரத்து செய்யக்கோரியும், தனக்கு எதிரான இவ்வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கேட்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு ஜூலை 17-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து, இந்த மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை இயக்குநரக உதவி இயக்குநர் ஏ.சாதிக் முகமது நைனார் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், டிடிவி தினகரனுக்கு எதிரான இந்த வழக்கு கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருகிறது.
குற்றச்சாட்டு பதிவுக்கு முன்பாக, மனுதாரருக்குப் போதுமான வாய்ப்புகள், காலம் மற்றும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே, கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி நேரில் ஆஜரானார்.
மேலும் இந்த வழக்கில் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் நன்கு ஆராய்ந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் இயற்கை நீதி பின்பற்றப்பட்டுள்ளது. கீழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை இழுத்தடிக்கும் வகையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சட்டப்படிதான் இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மை, பொருளாதார மேம்பாடு மற்றும் பெரா சட்ட விதிகளுக்கு எதிராக செயல்பட்ட மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பு வாதத்துக்குப் பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.