சென்னை: காவிரி நீர் பிடிப்பு பகுதியான கொடகு மாவட்டத்தில் மழை பெய்து இருக்கிறது. அடுத்து வரும் மூன்று நாட்களும் கொடகு மாவட்டத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது சிறு சிறு தூறல்கள் வந்தாலும், இது கன மழையாக மாற இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றும், சென்னையில் அடுத்து எப்போது மழை பெய்யும் என்பது குறித்த தெளிவான அறிகுறிகள் கிடைக்கவில்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, சென்னையில் அற்புதமான வானிலை நிலவுகிறது. அங்கும் இங்குமாக தூறல் போடுகிறது. மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. பெரிய மழையாக பெய்யும் என்று நினைக்க வேண்டாம். இப்போதைக்கு சென்னையில் அடுத்த மழை எப்போது வரும் என்பது குறித்த தெளிவான அறிகுறிகள் எதுவும் இல்லை.
தமிழ் நாட்டின் மலை பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைகள் என்று சொல்லப்படும் நீலகிரி மற்றும் கோவை பகுதிகளில் மழை அதிகரிக்க ஆரம்பித்து இருக்கிறது. (மலை பகுதிகளில் மட்டும்... நகரங்களில் அல்ல).
இன்று காலை கொடகு மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. அடுத்த மூன்று நாட்களை (இன்று முதல்) உன்னிப்பாக கவனிக்க வேண்டி உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.