தமிழ்ப் பல்கலை.யில் இலங்கை மாணவர்களுக்கான சங்க இலக்கியப் பயிற்சி

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சங்க இலக்கிய அறங்கள் என்ற தலைப்பில் இலங்கை மாணவர்களுக்கான 10 நாள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
விழாவில் பேசுகிறார் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி. பாஸ்கர்.
விழாவில் பேசுகிறார் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி. பாஸ்கர்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சங்க இலக்கிய அறங்கள் என்ற தலைப்பில் இலங்கை மாணவர்களுக்கான 10 நாள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்தப் பயிற்சியில், இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ் பட்டப்படிப்புப் பயிலும் 15 மாணவிகள், 3 மாணவர்கள் என மொத்தம் 18 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் 3 பேராசிரியர்கள் வந்துள்ளனர்.
இதுகுறித்து இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் வ. மகேஸ்வரன் தெரிவித்தது:
எங்களது பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ்ப் பட்டப்படிப்பில் மூன்றாமாண்டு, நான்காமாண்டில் (இலங்கையில் இளங்கலைப் பட்டப்படிப்பு நான்கு ஆண்டுகள் கொண்டது) சங்க இலக்கியம் தொடர்பாக தலா ஒரு தாள் உள்ளது. எங்களது பல்கலைக்கழகத்தில் சங்க இலக்கியம் குறித்து கற்பித்துள்ளோம். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சங்க இலக்கியம் தொடர்பான விற்பன்னர்கள் உள்ளனர். இவர்களிடம் சங்க இலக்கியம் குறித்து ஆழமாகக் கற்றுக் கொள்வதற்காக மாணவர்கள் இங்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு இதேபோல 15 மாணவர்கள் இங்கு வந்து கற்று பயனடைந்தனர் என்றார் மகேஸ்வரன்.
புதிய கோணத்தில் புதிய விஷயங்களை அறிந்து கொள்ள.... பயிற்சி பெறும் மாணவி நாசிஹா தெரிவித்தது:
சங்கக் காலம் குறித்து படித்திருக்கிறோம். இதை இன்னும் விரிவாகப் படிப்பதற்காக இங்கு வந்துளோம். சங்க காலத்தில் அறம் எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது. மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய உள்ளோம். எங்களது நாட்டில் படித்திருந்தாலும், இங்கு புதிய கோணத்தில் புது விஷயங்களை அறிந்து கொள்ள வந்துள்ளோம் என்றார் அவர்.
சங்க கால அறம், இப்போது உள்ள அறம் குறித்து ஒப்பாய்வு செய்வதற்கும், அந்தக் காலத்தில் அறம் எப்படி இருந்தது என்பதை அறிவதற்கும் வந்துளோம் என்றார் மற்றொரு மாணவி கொன்சித்தா.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கத்தின் தொடக்க விழாவில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி. பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் ச. முத்துக்குமார், அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பாண்டி, தமிழ்ப் பல்கலைக்கழக வளர்தமிழ்ப் புலத் தலைவர் செ. சுப்பிரமணியன், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவர் இரா. குறிஞ்சி வேந்தன், பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் சா. உதயசூரியன், இணைப் பேராசிரியர்கள் உ. பிரபாகரன், ஞா. பழனிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com