தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 100 பேரை போலீஸார் கைது செய்தனர். தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர், தலைவர் கே.எம்.சரீப் தலைமையில் திங்கள்கிழமை 'கதிராமங்கலத்தை காப்போம்' என்ற தலைப்பில் கும்பகோணத்திலிருந்து கதிராமங்கலத்துக்கு நடைபயணம் செல்ல முயன்றனர். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். பின்னர் கும்பகோணம் மீன்மார்கெட் அருகே சரீப் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சபிஅகமது, இணைய தள பொறுப்பாளர் சரீப்ராசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் மீ.த. பாண்டியன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இதில் பொதுச்செயலாளர் ஆதிதிராவிடர், துணைத் தலைவர் வெற்றிச்செல்வன், மாநில செயலாளர்கள் முகமதுஅஸ்லம், தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கதிராமங்கலம் உள்ளிட்ட காவிரி படுகையிலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும். இதற்காக போராடி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பத்து பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர் கும்பகோணத்திலிருந்து கதிராமங்கலம் நோக்கி நடைபயணம் செல்ல முயன்றனர். இவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் 30 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்தனர்.