அரசியல் என்பது சுட்டுரையில் (ட்விட்டர்) இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தொடர்பான கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பதில் அளித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
அரசியல் மூலமாக மக்களுக்குச் சேவை செய்யும் தலைவர்கள் ஏற்கெனவே உள்ளனர். ஆனால், எந்தச் சேவையும் செய்யாமல் உள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு திடீரென அரசியல் ஞானோதயம் வருவது ஏன் என்று தெரியவில்லை.
திரைத் துறையில் இருந்தாலும் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் இருந்தே சமூகக் கருத்துகளைப் பேசி வருகிறார். ஆனால், கமல்ஹாசன் இவ்வளவு நாள்களாக சமூகப் பிரச்னைகளைப் பேசாமல் தற்போது பேசுவது ஏன் என்று தெரியவில்லை. தமிழகத்தில் ஓர் ஆண்டுக்கு முன்னர் பல்வேறு பிரச்னைகள் இருந்தன. அப்போதெல்லாம் கமல் இதுபோல குரல் கொடுக்கவில்லை. ஆனால், அவர் இப்போது திடீரென அரசியலுக்கு வர நினைப்பது ஏன்?
சினிமா போல ஒரு நாள் முதல்வர் ஆகலாம் என்று நினைத்துக் கொண்டு அரசியலுக்கு வர முடியாது. அரசியல் என்பது சுட்டுரையில் மட்டும் இல்லை. அது மக்களுடன் நிஜ தளத்தில் இருக்கிறது.
சேலம் மாணவி வளர்மதி விவகாரம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். அவர் கைது செய்யப்பட்டதற்கு பாஜக ஆதரவும் இல்லை, எதிராகவும் இல்லை. இந்த விஷயத்தில் உண்மைத் தன்மையை அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ஊழல்கள் நிறைந்துள்ளன என்ற உண்மை தற்போது சிறை விவகாரம் மூலமாக வெளிப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.ஐ.ஜி. ரூபா மாற்றப்பட்டது குறித்துத் தீர விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.