சென்னை: சென்னையில் உள்ள அண்ணா பொறியியல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இங்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
நூற்றுக்கணக்கான மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் பல்கலைக்கழகத்துக்கு கலந்தாய்வுக்காக வந்திருக்கும் நிலையில், போதிய குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் இல்லாமல் ஏராளமானோர் அவதிக்குள்ளாகினர்.
நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், அந்த மாணவர்களுக்கான எவ்வித சிறப்பு ஏற்பாடுகளையும் பல்கலைக்கழகம் செய்துத்தரவில்லை.
அது மட்டுமல்லாமல், பொறியியல் கல்லூரிகளின் பட்டியல், காலியாக இருக்கும் சேர்க்கை இடங்கள் குறித்து அறிவிக்கும் பெரிய திரையும் இன்னும் பொருத்தப்படவில்லை. இதனால் பெற்றோர் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
இது குறித்து பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பொறியியல் கலந்தாய்வு குறித்து ஒரு வார காலத்துக்கு முன்புதான் அரசு அறிவித்தது. அதனால் தேவையான வசதிகளை செய்ய முடியாமல் போனதாகவும், வழக்கமாக, ஒரு மாதத்துக்கு முன்கூட்டியே கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். எனவே தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு 1 வாரம் மட்டுமே அவகாசம் இருந்ததால் தான் இந்த பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.